Tuesday, September 2, 2014

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் - அவர்களும் மனிதர்களே...!

இந்த நட்ட நடுராத்திரியில் வேறு வழியே இல்லாமல் தான் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தேன்,

பொதுவாக இந்த நேரத்திற்கு எல்லாம் அவர்களை அழைத்தால் உச்சகட்ட உறக்கத்தில் இருப்பார்கள், அதிலும் இரவு பத்து மணியில் இருந்தே 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று பேசத் தொடங்குவதால் பாவம் விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். இது அவர்களுக்கு எத்தனாவது நாள் இரவுப்பணி என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. உறக்கம் தொலைத்த இரவுகளில் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் அவர்கள். 'அதற்குத் தான சம்பளம் வாங்குகிறாங்க' என்ற கேள்வி எழுந்தாலும், உள்ளூர் சேவைக்கெல்லாம் மிஞ்சிப்போனால் எட்டாயிரம் கொடுப்பார்கள் அதற்கு மேல் எதிர்பார்த்தால் வீட்டிற்கு கிளம்பி விடலாம்.

அலுவலகம் ஓ.எம்.ஆரிலோ அம்பத்தூரிலோ, போரூரிலோ இருக்கலாம். தங்கியிருப்பது நகரின் மூலையில் எங்கோ ஒரு பத்துக்கு பத்து அறையில் தன்னைப் போன்ற ஐந்து பேருடன். ஒவ்வொருவரும் வேறுவேறு ஷிப்டிற்கு சென்று வருவதால் 'உறங்க ஒரு இடம்' என்பது பிரச்சனையே இல்லை. 'வாழ ஒரு வேலை' என்பது மட்டும்தான் பிரச்சனை. கூடவே சாப்பாடு. நல்ல சாப்பாடு என்பது என்றாவது ஒருநாள் அரிதாகக் கிடைப்பது. மற்றபடி சாப்பாடு என்பது பசியை அடக்கினால் போதும். மூன்று வேளையும் சாப்பாடு என்பதெல்லாம் கையில் தாராளமாகக் காசு இருக்கும் நாட்களில் மட்டுமே. காசு இல்லையா, இரண்டு வேளை சாப்பாடு. ஒருவேளை தம். உடம்பை வளர்த்து உயிரை வளர்த்துவிடலாம்.

மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறதோ இல்லையோ மூன்று வேளையும் வேலை நேரம் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும் இந்த வேலை நேரத்திற்கு அவர்கள் தங்களைத் தயராய் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தயாராய் இருந்தாலும் அவர்களுடைய உடல் தயாராய் இருக்க வேண்டும். உடல் தயாராய் இருந்தாலும் எடுத்துக்கொள்ளும் உணவு தயாராய் இருக்க வேண்டும். இத்தனையும் மீறி வேலை பார்க்கும் இடத்திற்கு நள்ளிரவில் வரச்சொன்னாலும் வரவேண்டும், அதிகாலை தூங்கி நண்பகல் வரச்சொன்னாலும் மறுக்காது வரவேண்டும். பெரும்பாலான அலுவலகங்களில் இரவுப்பணி என்றால் வாகனவசதி உண்டு என்றாலும் வீட்டுவாசல் வரை எல்லாம் வரமாட்டார்கள். அருகில் எங்காவது ஒரு கிமீ தொலைவில் வரச் சொல்வார்கள், அங்கு போய் ஏறிக் கொள்ள வேண்டியது தான்.

'பேசிட்டே தான இருக்கணும், இதுல என்ன இருக்கு' என்று நினைத்தால் அதில் தான் பிரச்சனையே, அதை விடப் பிரச்சனை அவர்கள் பேசிக்கொண்டிருப்பது மனிதர்களுடன். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் என்ற போர்வையில் பேசும் மிருங்கங்களுடன். 'வண்ணாந்துறையில உள்பாவாடை காணாமப் போனக்கூட என்ன தான் புடிச்சு உள்ள போடுறாங்க எசமான்' என்பது போலத் தான் இவர்களின் நிலையம்.

மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது எவனை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டானோ 'அவன்' மீதும் மட்டுமே எளிதில் பாயும். இங்கே இந்த 'அவன்' வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள். உயிர் வாழ்தலுக்காக வேறுவழி தெரியாமல் சிக்கிக்கொண்ட ஆடுகள். அட்டகத்திகளின் வீரத்தை, கழுத்தறுப்பை வேறுவழியே இல்லாமல் தாங்கிக் கொண்டிருப்பவர்கள். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்கள்.

வேலையில் சேர்ந்த முதல் சில வாரங்களுக்கு 'வாடிக்கையாளர்களைக் கையாளுவது எப்படி?' என்பது குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் சூத்திரம் 'உன் குடும்பத்தையே திட்டினாலும், சிரித்துக் கொண்டே நன்றி தான் சொல்லணும், கோவப்பட்டு பேசிற கூடாது, தொடர்ப துண்டிக்கக் கூடாது'. இதை என் நண்பன் என்னிடம் கூறும் போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.

ஒரு நள்ளிரவில் அவனுக்குப் போன் செய்து கிண்டல் செய்த பெண்ணின் எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு அடுத்த நாள் அழாத குறையாக 'அப்படிச் செய்யாதே' என்று கூறியிருக்கிறான். அவள் பணத்திமிர் அடங்கவில்லை. பதிலுக்கு இவனை மிரட்டியிருக்கிறாள். மறுநாள் ஏதோ ஒரு பாத்ரூம் சுவரில் கிறுக்கிவிட்டு வந்துவிட்டான். அதில் இருந்து சில நாட்களில் அந்த நம்பர் டஸ் நாட் எக்சிஸ்ட். ராஜாராணி படம் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே போன் செய்தான் 'ஜெய் சரியான லூசுப்பய பாஸு, கஸ்டமர டீல் பண்ணத் தெரியல' என்றான். 'ஆனா எங்களையெல்லாம் பார்த்தா எல்லாவனுக்கும் நக்கலா இருக்கு இல்ல', அட்லீ மீது பெருங்கோவம் இருக்கிறது அவனுக்கு. மொத்த அரங்கமும் ஜெய்யை கிண்டல் செய்து சிரிக்கும் போது தான் மட்டும் அழுது கொண்டிருந்ததாகக் கூறினான். அவ்வளவு எளிதில் யாராலும் உணர்ந்துவிட முடியாத வலி அது.

ஆண்டோ கூறாத கதைகளையா என்னிடம் வேறு யாரேனும் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாள் வேலை முடிந்து வந்ததும் விரக்கதியின் உச்சத்தில் இருப்பார். வீட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை அங்கே இங்கே என்று திரும்பிய இடத்தில் எல்லாம் பிரச்சனையில் இருந்தவருக்கு கிடைத்த வேலையிலும் பிரச்சனை. பேசும் எந்த ஒரு மனிதரும் நிதானத்தில் இருக்கவில்லை. நிதானம் என்பதை சரக்கடித்தவர்கள் என்ற தொணியில் கூறவில்லை. அடிக்காதவர்களையும் சேர்த்துதான். கோபம் கிண்டல் நக்கல் நையாண்டி எகத்தாளம் திமிர் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையையும் ஓரிரவிலும் ஒவ்வொரு இரவுகளிலும் அனுபவிப்பவர்கள்.

2007ம் வருடம் என்று நினைக்கிறன். ரிலையன்ஸ் கைபேசி பரவலாகிக் கொண்டிருந்த நேரம். என்.எஸ்.எஸ் முகாமில் இருந்தோம். அந்த நேரத்தில் ரிலையன்சில் மட்டும் ஒரு வசதி உண்டு, அது வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தால் இலவசம். தினமும் நாட்டுநலப் பணிகளை முடித்துவிட்டு பத்து பேர் கொண்ட குழுவாக ஓரிடத்தில் கூடுவார்கள். ரிலையன்சில் கூடுதல் வசதி ஒன்றையும் செய்திருந்தார்கள். அது எத்தனை முறை போன் செய்தாலும் பெண்கள் தான் பேசுவார்கள். இது போதாதா இவர்களுக்கு. வட்டமாக அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பிளான் என்ன, இந்தப் பிளான் என்ன, ஏன் பாப்பான்கொளத்துல ஒழுங்கா சிக்னல் எடுக்க மாட்டேங்குது என்று வரிசையாக பேசுவார்கள். தினசரிப் பேசுவார்கள். ஆரண்ய காண்டத்தில் ஒரு வசனம் வரும் 'ஸ்பீக்கர் போன்ல போட்டு பேசுனா கிடைக்கிற கிக்கே தனி' அதைதான் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நேரம்! தினமும் ஒரே பிள்ளையே சிக்கியது. நான்காவது நாள் ஸ்பீக்கரில் அது அழும் குரல் கேட்டது.

படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்களிடம் பேசும் போது மட்டுமே வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள் உண்மையான அக்கறையுடன் பேசுவார்கள். 'தலையில செங்கலு சொமந்து சம்பாதிச்ச காசு தம்பி மொத்தமா போயிட்டு', என் வீட்டுக்கராரு வந்த காச என்னடி பண்ணினன்னு போட்டு அடிப்பாரு தயவு செஞ்சு ஏத்தி விட்ருங்க தம்பி' என்று அழுத பெண்களை, பெரியவர்களைப் பற்றியெல்லாம் ஆண்டோ கதைகதையாகக் கூறியிருக்கிறார். 'இவுங்க ஒண்ணா அமுக்கு, இரண்ட அமுக்கு, *** அமுக்குன்னு போன் பன்னிருவாங்க பாவம் டா அவங்க, படிப்பறிவில்லாதவங்க. எதையாது அமுக்கிருவாங்க. தப்பு அவங்க மேல இருக்கது அவங்களுக்குப் புரியாது. அழுவாங்க, நாம எப்படி காச கொடுக்க முடியும்' என்பார். இருந்தாலும் சிலருக்கு இவரது சொந்த காசையே போட்டு ரீசார்ஜ் செய்து கொடுத்த சம்பங்களும் உண்டு.

ஒன்பது மணிநேரம் தொடர்ந்த வேலை. இடையில் அரை மணிநேரம் மட்டுமே இடைவேளை. டார்கெட் அச்சீவ் செய்ய பேசிக் கொண்டே இருக்க வேண்டும். காது எரிய வாய் வலிக்க பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு வாடிக்கையாள சேவை மைய அதிகாரியோடு பேசுகிறீர்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் சரிபார்க்க சில நிமிடங்கள் ஆகலாம், அந்த சில நிமிடங்களும் அவர்கள் வாய் சும்மா இருக்கக் கூடாது, 'உங்களுக்குத் தேவையான விசயங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று எதையாவது கூறி தான் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதை நிருபிக்க வேண்டும். யாரிடம்? தன்னைத் தொடர்ந்து கண்காணிக்கும் மென்பொருளிடம். ஆம் எல்லாவற்றிற்குமே மென்பொருள் தான்.

அவ்வபோது மேலதிகாரி இதனை ஆராய்ந்து கொண்டே இருப்பார். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசாமல் இருந்ததைக் கண்டுபிடித்தாலோ, வாடிக்கையாளரிடம் கொஞ்சம் நக்கலாக அல்லது அலுப்பை வெளிபடுத்தும்படி பேசினாலோ அவ்வளவு தான். மானம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அதிசியமான பொருளே தவிர அத்தியாவசியப் பொருள் அல்ல. வேண்டுமானால் இணையத்தில் தேடிப்பாருங்கள் இவர்களை கிண்டல் செய்து மகிழ்ந்தவர்கள் மகிழ்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியும்.

வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டால் முப்பது நொடியில் எடுக்க வேண்டும் என்பது விதி. நூறு அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நிமிடத்திற்கு இருநூறு அழைப்பு வரும். தொடர்ந்த மணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். அழைக்கும் நமக்குப் பொறுமை இருக்காது. அது நமது கோவத்தை இன்னும் அதிகப்படுத்தும். பாவம் மரத்துப் போனவர்கள். நீங்கள் கூறுவதையும் மறந்து தான் ஆக வேண்டும்.

ஆனால், ஏதோ வாடிக்கையாள சேவைமைய அதிகாரிகள் தங்களுக்கு அடிமைகள் என்ற நினைப்பிலேயே இங்கு பலரும் அவர்களைக் கையாளுகிறார்கள். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது, மனது இருக்கிறது தன்மானம் இருக்கிறது கவலை இருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி அவர்களுகென்று ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். எத்தனையோ விதமான மனிதர்களைக் கையாண்டு கையாண்டு வாழ்வில் மனிதர்களுடன் பேசவே தயங்குகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அப்பாவோ அம்மாவோ அழைத்தால் 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று கேட்கும் பல இளைஞர்களின் மூளை வலு இழந்துவிட்டது.

இருந்தும் ஏன் இப்படியொரு மோசமான வலையில் போய் விழுந்து தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். சென்னையில் இந்த வேலையாவது கிடைக்காதா என்று அலையும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர். பெருத்த போட்டிக்கு இடையில் கஷ்டப்பட்டுக் கிடைத்த வேலை. அப்படியெல்லாம் எளிதில் விட்டுவிட மாட்டார்கள். தயவுசெய்து எதையாவது ஏற்குமாறா பேசி தங்கள் வேலையை விட்டுவிட வைத்துவிடாதீர்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம்.

ஒரு காலத்தில் நானும்கூட வாய் வலிக்க வலிக்கவெல்லாம் சண்டையிட்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு மோசமான செயல் அது என்று புரிகிறது. பரவாயில்லை அந்த கடந்த காலத்திற்குப் பிராயச்சித்தமாகவேனும் இந்தக் கட்டுரை இருந்துவிட்டுப் போகட்டுமே.

நன்றி : திடங்கொண்டு போராடு



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: